தமிழ் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறோம் என்ற பெயரில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்ட முதிர்ச்சியற்ற- சிறுபிள்ளைத்தனமான- நடவடிக்கை புஷ்வாணமாகியுள்ளது.
சூம் வழியாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என மேற்கொண்ட முயற்சி இப்போதைக்கு நடக்காது. திட்டமிட்டபடி நாளை கலந்துரையாடல் நடைபெற வாய்ப்பில்லையென தமிழ்பக்கம் அறிகிறது. தமிழ் தேசிய கட்சி, தமிழ் தேசிய மக்கள் முனனணி என்பன கலந்துரையாடலில் கலந்துகொள்ள மாட்டார்கள்.
ஒருமித்த கருத்துள்ள தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் இணைந்து முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காக இந்த கலந்துரையாடல் திட்டமிடப்படுவதாக ரெலோ அறிவித்திருந்தது.
இந்த கலந்துரையாடலில் பங்குபெங மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், க.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு ரெலோ அழைப்பு அனுப்பியது.
இந்த நடவடிக்கையை பார்த்தால், ஏதோ ரெலோ பரந்த மனப்பான்மையுடன் ஒற்றுமைக்கு முயல்வதாக தோன்றும்.
ஆனால், அதற்குள் இருந்த சிறுபிள்ளைத்தனத்தால், இந்த முயற்சியே பிசுபிசுத்துள்ளது.
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் நான்கு கட்சிகள் உள்ளன. அதில் இரண்டு கட்சிகளிற்கு ரெலோ அழைப்பு விடுத்துள்ளது. அனந்தி சசிதரனின் தரப்பை ஒரு கட்சியாக கருதுவதற்கு பலருக்கு தயக்கமிருக்கலாம். அதனால் அதை விட்டுவிடலாம். ஆனால், தமிழ் தேசிய கட்சியையும் தவிர்த்துள்ளனர்.
அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமேயிருந்தது.
அதாவது, அவர்கள் ரெலோவிலிருந்து பிரிந்து போனார்கள். தமிழ் மக்களிற்குள் ஒற்றுமையை உண்டாக்க முயற்சிப்பதாக நீண்ட அறிக்கையை அனுப்பிய ரெலோவின் சின்னத்தனம் அதற்குள் மறைந்திருந்தது.
தமது கூட்டணியிலுள்ள சிலரை- தனிப்பட்ட பிரச்சனைகளால் ரெலோ தவிர்த்து- ஏனையவர்களை கலந்துரையாடலிற்கு அழைத்தால், யாராவது கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா?
உங்கள் சூம் கலந்துரையாடலில் நாம் கலந்து கொள்ள வாய்ப்பேயில்லை ராஜா என தமிழ் மக்கள் கூட்டணி செல்வம் அடைக்கலநாதனிற்கு இன்று அறிவித்து விட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கிய தலைவர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் இதனை இன்று மாலை தெரிவித்தார்.
“தமிழ் மக்கள் கூட்டணியினர் கலந்து கொள்ள வாய்ப்பில்லையென்பதற்கான காரணம், தமிழ் தேசிய கட்சிக்கு அழைப்பு விடுக்காததுதான் என்பதை, ரெலோவிற்கு தெளிவாக தெரிவித்தீர்களா?“ என தமிழ்பக்கம் வினவியபோது,
“நாம் என்ன காரணத்தை கூறி கலந்து கொள்ளாமல் விட்டாலும், அடிப்படையான காரணத்தை ரெலோவினர் ஊகித்திருப்பார்கள். எனினும், நாம் அவர்களிற்கு ஓரளவு வெளிப்படையாகவே தெரிவித்து விட்டோம். எனினும், இன்று மாலையில் மீண்டும் அவர்கள் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாளை எப்படியும் கலந்துரையாடல் நடத்தி விடுவதில் ரெலோ தீவிரம் காண்பிக்கிறது. ஆனால் எமது முடிவை அவர்களிற்கு தெளிவாக தெரிவித்து விட்டோம். அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இந்த விடயத்தில் நடந்தால் தவிர, இந்த கலந்துரையாடல் நாளை நடக்காது“ என்றார்.
இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லையென முடிவெடுத்துள்ளனர்.



