தற்போது நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
இருவரின் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன. எனவே ரசிகர்கள் பலர் உண்மையாகவே இருவரும் ட்விட்டரில் இணைந்துள்ளதாக நினைத்து அந்தக் கணக்குகளைப் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.
அதையடுத்து ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா இருவருக்கும் எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்குகள் இல்லை என்று விஜய்க்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
“விஜய் சாரின் குழந்தைகள் ட்விட்டரில் இல்லை. பல ரசிகர்கள் அவர்கள் பெயரில் உள்ள சமூக வலைத்தள கணக்குகளைப் பின்தொடர்வது பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவை போலியானவை என்று பலருக்குத் தெரிவதில்லை. எனவே, ரசிகர்கள் அந்த கணக்குகளைப் பின்தொடர வேண்டாம் என்று அவரது அலுவலகம் இந்த விஷயத்தில் தெளிவுபடுத்த முடிவு செய்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் விஜய் ‘வேட்டைக்காரன்’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘உப்பேனா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
ஜேசன் தற்போது கனடாவில் திரைப்பட இயக்கம் குறித்து படித்து வருவதாகக் கூறப்படுகிறது. படித்து முடித்தவுடன் படம் இயக்குவதில் அவர் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாஷா ‘தெறி’ படத்தின் இறுதியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.



