மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி அரசரட்ணம் இளங்கோவன் தெரிவித்தார்.
போதைப்பொருள் உட்கொண்டதன் காரணத்தால் தான் உயிரிழந்துள்ளார் என தெரிவித்த சட்ட வைத்தியர், பிரேதப் பரிசோதனையின் போது உடம்பில் காயங்களும் காணப்பட்டதாகவும்உதெரிவித்தார்.
மட்டக்களப்பில் 25 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய காவலில் அடைத்து வைக்கப்பட இளைஞன் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதையடுத்து உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இடத்திலேயே, தமது கண்முன்பாகவே கடுமையாக தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரி அரசரெட்ணம் இளங்கோவன் தலைமயின் கீழ் இடம்பெற்றது.
உயிரிழந்த இளைஞன், 4 பக்கட்டுக்களை கொண்ட ஐஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில், நெஞ்சுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, பிரேத பரிசோதனையில் உடம்பில் காயங்களும் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழந்தமை தொடர்பாக, வாழைச்சேனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



