தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அமரர் மு. சிவசிதம்பரம் அவர்களுடைய 19ஆவது நினைவு தினத்தில் அவர்பற்றிய எமது நினைவுகளை வெளிக்கொண்டுவரவேண்டியது இன்றைய நிலையில் அவசியமாகிறது.
சிம்மக் குரலோன் எனவும் உடுப்பிட்டிச் சிங்கம் எனவும் தலைவர் சிவா எனவும் அழைக்கப்பட்ட சிவாஐயாவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது! எளிமையைக் கடைப்பிடித்து கொள்கைப் பற்றுடன் இறுதிவரை வாழ்ந்த ஒரு சிறந்த தலைவர்! மணியகாரன் பரம்பரையில் வசதி வாய்ப்புக்களுடன் பல பெரிய பதவிகளைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில் அவற்றை எல்லாம் உதறி வாழ்ந்த உத்தமர். தனது உடைமைகளை 1983 கலவரத்தில் முற்றாக இழந்த நிலையில் வாழ்ந்த பெருந்தகை! அவர் போன்ற தலைவரைக் காண்பது இனி முடியாத ஒன்று!
1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பருத்தித்துறையில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு. மு.சிவசிதம்பரம் அவர்கள் சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அரசுக்கு எதிரான வேலைநிறுத்த எதிர்ப்புப் போராட்டங்களில் கட்சிவேறுபாடின்றி ஆதரவு அளித்துவந்தார்.
1960 மார்ச் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் 7365 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார். பின் 1960 ஜூலையில் அதே உடுப்பிட்டித் தொகுதியில் 9080 வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவானார். 1965ல் 12009 வாக்குகளைப்பெற்றுத் தெரிவாகிய சிவசிதம்பரம் அவர்கள் 1970ல் 11662 வாக்குகளைப் பெற்று தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ஜெயக்கொடி அவர்களினால் தோற்கடிக்கப்பட்டார்.
1967 முதல் 1970வரை பிரதிச் சபாநாயகராக பாராளுமன்றில் கடமையாற்றினார்!
1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பினை எதிர்த்து தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியவேளையில் அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். 1977ல் நல்லூரில் 29858வாக்குகளைப் பெற்று (28137 வாக்கு வித்தியாசத்தில் – இலங்கையில் தனிஉறுப்பினர் தொகுதியில் அதிகூடியது) வெற்றிபெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார்.
1989ல் யாழ் மாவட்டத்தில் 8359 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.
கொழும்பில் 1989 July 13ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மயிரிழையில் தப்பி சிகிச்சைபெற்ற வேளையிலும்கூட தமக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்காதவர்.
1994ல் வன்னியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும் கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்குகொண்டவர். 1998ல் சுகவீனமுற்றபோது இந்தியாவுக்குச் சென்று தனது குடும்பத்தவர்களுடன் இருந்து கட்சியின் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டதை குறிப்பிட்டேயாகவேண்டும்..
5.12.2001ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 4 கட்சிகளின கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். வயது முதிர்ச்சி காரணமாக சிலநாட்கள் சுகவீனமுற்றிருந்த அவர் 05.06.2002ல் கொழும்பு வைத்தியசாலையில் காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் அவரது விருப்பத்தின்படி அவரது சொந்த ஊரான கரவெட்டியில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவின் 19ஆவது நினைவு இன்றாகும். மக்களை மதித்து செயற்பட்ட தலைவரின் நினைவுகளை ஒருபோதும் மறக்க முடியாது!

-தங்க முகுந்தன்-



