யாழ் நூலக எரிப்பின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள் என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு, யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அஞ்சலி நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமான யாழ் நூலகம் தென்னிலங்கையிலிருந்து வந்த காடையர்களினால் தீமூட்டப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதை முன்னிட்டு, இன்று காலை யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடக்கவிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை யாழ் முதல்வர் வி.மணிவண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டால் கைது செய்யப்படுவார் என தெரிவித்தார்.
இதையடுத்து அஞ்சலி நிகழ்வு கைவிடப்பட்டது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கான தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வுகள் பாதுகாப்பு தரப்பினரால் பலவந்தமாக தடுக்கப்பட்டிருந்ததும், அதன் பின்னர் கொழும்பில் யுத்த வெற்றி விழா நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தடுப்பூசி வழங்குமிடங்களில் அரச தரப்பு அரசியல்வாதிகள் பெரும் கூட்டம் கூடி, செல்பி படங்களும் எடுத்த சம்பவங்களும் நேற்று முன்தினம் பதிவாகியிருந்தது.



