4 மகன்கள், மருமகள் கொரோனா பாதிப்பால் இறந்ததை அறிந்த தாயார் அதிர்ச்சியில் மரணமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளியைச் சேர்ந்தவர் நடராஜ் என்பவரின் மகன் தெய்வராஜ் (42). கடந்த மாதம், கோவையில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்குச் சென்று வந்துள்ளார். இதையடுத்து அவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த 9ஆம் திகதி உயிரிழந்தார்.
தொடர்ந்து, இவரது மனைவி சாந்தி (35), தெய்வராஜின் மூத்த சகோதரர்கள் தங்கராஜ் (52), ராஜா (50), சவுந்தரராஜன் (45) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சகோதரர்களின் தாயார் பாப்பாளுக்கு (70) மகன்கள் இறந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. வயது மூப்பு காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் குடும்பத்தில் யாரும் சொல்லவில்லை. கடந்த 26ஆம் திகதி தனது மகன்கள் மற்றும் மருமகள் யாரும் வராததால் உறவினர்களிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அனைவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கவே, மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அன்று நள்ளிரவு உடல்நிலை மோசமாகி, உயிரிழந்தார்.
மேலும், அதே பகுதியில் தறித் தொழிலாளி ஈஸ்வரமூர்த்தி (40), தனது தம்பி செந்தில்குமார் (38) மற்றும் தாய் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். செந்தில்குமார் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், ஈஸ்வரமூர்த்திக்கும் தொற்று உறுதியாகி உயிரிழந்தார். இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்துத் தொற்றுக்கு உயிரிழந்ததால், அங்கு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.




