யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 103 (அரசடி) கிராம அலுவலர் பிரிவில் ஒரு பகுதியினை முடக்குவதற்கு யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மாகாண சுகாதார பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக 24 பேர் குறித்த பகுதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனர். நேற்று அன்ரிஜன் சோதனையில் 12 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியை முடக்குவதற்கு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மாகாண சுகாதார பணிப்பாளர் அரச அதிபர், யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசடிப்பகுதியில் உள்ள செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகாலையில் தேர் உற்சவம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஒருவரே முதலில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
தற்போது, ஆலயத்திற்கு சென்ற பலர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இன்னும் பலர் நோய் அறிகுறிகளுடன் உள்ளனர்.
அவர்களை நடமாட வேண்டாமென அறிவுறுத்தியும், பிசிஆர் சோதனை செய்து முடிவு வருவதற்குள்ளும் தொடர்ந்து நடமாடி வருகிறார்கள். இப்படி ஆபத்தான விதத்தில் நடக்கும் பலரே அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்.
இந்த அபாய நிலையையடுத்து, அந்த பகுதியை முடக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.



