மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாகாணங்களிற்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களும் நிறுத்தப்படும் என்றார்.
இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அத்தகைய நபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கருதி, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாகவும், தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு மாகாண எல்லைக்கும் அருகே பொலிஸார் மற்றும் முப்படை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகள் அதே முறையில் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகாண எல்லைகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் கடமையை செய்ய மக்களின் ஆதரவை எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
சுகாதாரம், பாதுகாப்பு படைகள், நீர், மின்சாரம், தொலைத்தொடர்பு, துறைமுகம், விமான நிலையம், ஊடகம், நீதித்துறை, வணிக மற்றும் நிதி மற்றும் பிற அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் சோதனைச் சாவடிகளில் சோதனைகளைத் தொடர்ந்து மாகாணங்களைக் கடக்க முடியும்.
விவசாயம், உற்பத்தி மற்றும் தொழில்துறை துறைகளில் உள்ள பணியாளர்கள் மற்றும் முதலீட்டு வாரியம் மற்றும் வர்த்தக மண்டலங்களுடன் இணைக்கப்பட்டவர்களும் பயணிக்கலாம்.
எனினும், மாகாணங்களிற்கிடையிலான பயணத்திற்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது. வேலைக்காக மாகாணங்களை கடக்க வேண்டிய ஊழியர்கள் தங்கள் அலுவலக அடையாள அட்டை அல்லது நிறுவனத்திடமிருந்து பெறும் ஆவணத்தை காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.
இரவு விடுதிகள், கடற்கரை விருந்துகள், சினிமாக்கள், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் பிற விருந்துகளும் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படும். கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தவும் தடை விதிக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளை தங்கள் வீடுகளுக்கு வெளியே அல்லது உள்ளே ஏற்பாடு செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.
மாகாணம் கடந்து வருபவர்களிற்கு ஹொட்டல்கள், வீடுகளில் தங்குமிடம் வழங்குபவர்களிற்கு எதிராக
எவ்வாறாயினும், ஏதாவது ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் குறித்த பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு முற்றிலும் பயணத்தடை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.




