உத்தரபிரதேசத்தின் அசாம்கரில் உள்ள பால்ராம்பூர் மண்டல்யா மருத்துவமனையின் சவக்கிடங்கில் நான்கு நாட்களாக வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தை எலிகள் சாப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான அடையாளம் தெரியாத பெண் ஏப்ரல் 29 மாலை பிலாரியாகஞ்சில் சாலையோரத்தில் காயமடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் பால்ராம்பூர் மண்டல்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மறுநாள் (ஏப்ரல் 30) காலை அவர் இறந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது உடல் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை மற்றும் பிற சம்பிரதாயங்களைத் தொடங்க மருத்துவமனையிலிருந்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையின் கவனக்குறைவு காரணமாக, இறந்தவரின் அடையாளம் எதுவும் கண்டறியப்படவில்லை அல்லது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. உடல் நான்கு நாட்கள் மருத்துவமனையின் சவக்கிடங்கில் விடப்பட்டது.
சிதைவு காரணமாக உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதன் மூலம் நேற்று இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. எறும்புகள் மற்றும் எலிகள் உடலின் பெரும்பகுதியை சாப்பிட்டன என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ.கே.மிஸ்ரா, “இந்த சம்பவம் குறித்து எனக்குத் தெரியாது. நோயாளியின் மரணம் குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டால், தேவையான நடைமுறைகளை மேற்கொள்வது அவர்களின் கடமையாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இதேபோன்ற ஒரு சம்பவத்தில், சண்டிகருக்கு அருகிலுள்ள பஞ்சாபின் டெராபஸ்ஸியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் சவக்கிடங்கில் ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஒருவரின் மனைவியின் சடலம் எலிகளால் ஓரளவு சாப்பிட்டது பஞ்சாபில் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இறந்தவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வெளியே, மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம் காட்டியதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
மற்றொரு சம்பவத்தில், கடந்த ஆண்டு மே மாதம் உத்தரபிரதேச ஆக்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நான்கு நாட்கள் கவனிக்கப்படாமல் இருந்ததால், ஒரு பெண் புற்றுநோயாளியின் கால்விரலை எலிகள் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.




