லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வருகிறார். அவர் தனது இதயத்தை பேக்கில் சுமந்து கொண்டே இருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லண்டனை சேர்ந்த பெண் சில்வா ஹூசைன். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டில், திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயப் பிரச்சினை இருப்பதால். இதயம் செயலிழந்து வருவதாகவும், அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காது என்பதால், செயற்கை இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
வேறு வழியில்லை என்பதால், கணவரும், சில்வாவும் அதற்கு ஒத்து கொண்டனர். இதனையடுத்து 6 மணி நேர சிகிச்சை அளித்தபின், சில்வாவுக்கு செயற்கை இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்காக, 86 ஆயிரம் பவுண்ட் (ரூ.88.72 லட்சம்) செலவிடப்பட்டது. அதற்கு பின், சில்வா தான் செல்லும் இடம் எல்லாம், ஒரு பையை தனது தோளில் சுமந்து செல்வார்.
அந்த பையில், செயற்கை இதயத்துக்கான மோட்டாரும், பேட்டரிகளும், இரு பிளாஸ்டிக் குழாய்களும் இருக்கும். பிளாஸ்டிக் குழாய் மூலம், செயற்கை இதயத்திற்கு காற்று அனுப்பப்படும். இதன் மூலம் சில்வாவின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஒருவேளை செயற்கை இதயம் செயலிழந்து போனால், அதற்கு பதிலாக கையில் இருக்கும் மற்றொரு பையுடன் 90 நொடிகளுக்குள் இணைக்க வேண்டும்.
இல்லையெனில் அவரது உயிருக்கு அது ஆபத்தாக முடியும். இதனால் அவருடன் யாராவது ஒருவர் கூடவே இருக்க வேண்டியது இருக்கும். இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு லண்டனில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது மீண்டும் சமூக வலைளங்களில் வைரலாக பரவி வருகிறது.