கனடாவில் ‘குற்றவியல் சுற்றுலா’ கும்பல் அம்பலம்: 46 பேர் கைது, 164 பேருக்கு பிடியாணை
கனடாவின் டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் (Durham Regional Police) முன்னெடுத்துள்ள ‘புராஜெக்ட் ஜெட்செட்டர்’ (Project Jetsetter) என்ற ரகசிய புலனாய்வு நடவடிக்கையின் மூலம், கூலிக்காக குற்றங்களைச் செய்ய சட்டப்பூர்வமாக கனடாவிற்குள் நுழையும் “குற்றவியல் சுற்றுலாப் பயணிகள்” (Criminal Tourists) எனப்படும் சர்வதேச குற்றக் குழுவொன்று கண்டறியப்பட்டுள்ளது.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இந்தக் குழுவுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றின் மூலம் 2.6 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக 1,442 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக 164 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
டர்ஹாம் பிராந்திய காவல்துறைத் தலைவர் பீட்டர் மொரேரா கூறுகையில், இந்தக் கும்பல் மிகவும் நுட்பமான முறையில் செயல்பட்டு, குறிப்பாக முதியவர்களை குறிவைத்து மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் முதியவர்களிடம் வழி கேட்பது அல்லது முகவரி விசாரிப்பது போன்ற நட்பான அணுகுமுறையைப் பயன்படுத்தி நெருங்குவதாகவும், பின்னர் நன்றி தெரிவிப்பது போலக் கட்டிப்பிடித்தோ அல்லது போலி நகைகளைப் பரிசாக வழங்கியோ, அவர்களிடம் இருந்த உண்மையான தங்க நகைகளை திருடிச் செல்வதாகவும் அவர் விளக்கினார்.
விசாரணை அதிகாரி பிராட் சாப்மேன் தெரிவிக்கையில், அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு சிறிய பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.
மேலும், இவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் இடையே தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பதால், குற்றங்களைச் செய்த பின்னர் அதிகாரிகள் அவர்களை அடையாளம் காணும் முன்பே நாட்டை விட்டு வெளியேறிவிடும் சம்பவங்களும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


