அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மசூதி ஒன்று சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒருபுறம் வைரஸ் பரவல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாடு காரணமாக உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாக கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மசூதியில் 50 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன..
இது குறித்து மசூதி பொறுப்பாளர் கூறுகையில்,
ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மசூதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். ரமலான் மாதத்தில் இதை விட சிறப்பாக செய்வதற்கு வேறு என்ன உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 972 ஆக அதிகரித்த்ள்ளது.