தென்மராட்சி, அல்லாரை வீதியில் கொள்ளையடிக்க வந்த கொடூர கும்பலால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 12.30மணியளவில் இந்த கொலை சம்பவம் நடந்தது.
அல்லாரை வீதி, மீசாலை என்ற முகவரியில் முதிய தம்பதியொன்று தனிமையில் வசித்து வந்தனர்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு, 3 கொள்ளையர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
நித்திரையிலிருந்த தம்பதியினர் திடுக்கிட்டு விழித்த போது, குடும்பத் தலைவரான முதியவரை துவாய் ஒன்றினால் கழுத்தை நெரித்துள்ளனர். மனைவியின் வாயை பொத்தியுள்ளனர்.
இதனால் மனைவி மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்தார். முதியவரும் மயக்கமடைந்து வீழ்ந்தார்.
அந்த வீட்டில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்ததாால், அயலிலுள்ள இளைஞர்கள் சிலர் சற்று நேரத்தில் .அந்த வீட்டிற்கு வந்தனர். அப்போது கொள்ளையர்கள் தப்பியோடினர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
அயலவர்கள் வந்தபோது, வீட்டுக்குள் இருவரும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர்.
சற்று நேரத்தில் மனைவி விழிப்படைந்தாலும், கணவன் முகம் குப்பற விழுந்து அசைவற்று காணப்பட்டார்.
நோயாளர் காவுவண்டிக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்ததில் முதியவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
செல்லையா சிவராசா (80) என்பவரே கொல்லப்பட்டார்.
அவர்கள் அணிந்திருந்த 2 பவுண் மோதிரம், சங்கிலியை திருடர்கள் திருடியது தெரிய வந்துள்ளது. வேறு என்ன திருடப்பட்டுள்ளது என்பது இதுவரை உறுதியாகவில்லை.
தற்போது சாவகச்சேரி பொலிசார், தடயவியல் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அந்த தம்பதியினர் தனித்து வாழ்ந்த நிலையில், முதியவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மூதாட்டி தனிமையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




