மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்துள்ளது.
மெகபூபா முப்தி குறித்து மாநில குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) அளித்த அறிக்கையை அடுத்து மெகபூபாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டபின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் லாக்டவுனுக்கு முன்பாக வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி புதிய பாஸ்போர்ட் கேட்டு மெகபூபா முப்தி ஸ்ரீநகர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். மேலும், மெகபூபா முப்தி தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி ஸ்ரீநகர் உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீநகர், பாஸ்போர்ட் அதிகாரி இன்று உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “மெகபூபா முப்தி குறித்து டிஐடி பிரிவின் கூடுதல் டிஜிபி சார்பில் அளித்த பரிந்துரையில், மெகபூபா முப்திக்கு பாஸ்போர்ட் வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
விதிகளின்படி, போலீஸார் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட வேண்டும். ஆனால், சிஐடி போலீஸாரின் அறிக்கை மெகபூபா முப்திக்கு எதிராக இருக்கிறது. ஆதலால், பாஸ்போர்ட் வழங்க இயலாது. அந்த அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இனிமேல் மெகபூபா முப்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட தலைமை பாஸ்போர்ட் அதிகாரியிடம் அல்லது இணைச் செயலாளரிடம் பாஸ்போர்ட் கேட்டு அடுத்த 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக மெகபூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பேன் எனக் கூறி, சிஐடி அளித்த அறிக்கையின் அடிப்படையில், எனக்கு பாஸ்போர்ட் அலுவலகம் பாஸ்போர்ட் வழங்க மறுத்துவிட்டது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜம்மு காஷ்மிரில் இதுதான் இயல்புநிலை. ஒரு முன்னாள் முதல்வர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கூறி பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.