யாழ்ப்பாணம் நகரில் புதிய சந்தை பகுதியில் இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் மாநகரின், பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக வீதிகளிலுள்ள இரு மருங்கு கடைகளும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்பட்டுள்ளது.
இந்த பகுதியிலுள்ளவர்கள் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே வர்த்தக நிலையங்களை திறக்கலாமென அறிவிக்கப்பட்ட பின்னர், இன்று யாழ்ப்பாணம் புதிய சந்தை பகுதியில் 3 இடங்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே வர்த்தக நிலையங்களை திறக்கலாமென அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு குவிந்து வருகிறார்கள்.
இதன்மூலம், கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. வர்த்தகர்கள் பலர் இந்த நிலைமைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.





