யாழ்ப்பாணம், அரியாலையில் குழந்தையை தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள தாயாரையும், குழந்தையையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க யாழ் சிறுவர், பெண்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியாலையை சேர்ந்த தாயொருவர் தனது பிள்ளையை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குவைத்தில் பணிப்பெண்ணாக இருந்த சமயத்தில், இந்தியர் ஒருவருடன் ஏற்பட்ட காதலுறவை தொடர்ந்து பிரசவித்த குழந்தையுடன் அவர் நாடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், குழந்தையை தாக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து தாயார் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மனநல பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தாயாரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, ஆவணங்கள் இல்லாமல் தாயார் வெளிநாட்டிலிருந்து குழந்தையை கடத்தி வந்ததாக பொலிசார் மன்றில் குறிப்பிட்டனர். எனினும், முறைப்படியான ஆவணங்களுடனேயே குழந்தை அழைத்து வரப்பட்டதாக தெரிவித்ததுடன், அதற்கான ஆவணங்களை அவர்கள் வைத்திருப்பதாக சட்டத்தரணி தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குழந்தையையும், தாயாரையும் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க உத்தரவிட்டதுடன், எதிர்வரும் 23ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.