சுண்டைக்காய்ப்பொரியல்
நிறைய நன்மைகளை உள்ளடக்கிய இயற்கையின் அருட்கொடை.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கல்லீரல், நுரையீரல் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உணவுகளில் இது கட்டாயம் இடம்பெற்றிருக்கும். மாலைக்கண் நோயாளிகளுக்கும்கூட சுண்டைக்காய் சேர்க்கப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சர்க்கரைநோய், இதய பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல்நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாள்களாவது சுண்டைக்காய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் புளிக்குழம்பு, சாம்பார் போன்றவற்றில் சுண்டைக்காய் சேர்ப்பார்கள். அவற்றில், அதிகபட்சம் பத்து சுண்டைக்காய்களைத்தான் சாப்பிடுவோம். ஆனால், பொரியலாக எடுத்துக்கொள்ளும்போது அளவு அதிகமாகும். சுண்டைக்காய் பொரியலில் கசப்புச் சுவை அதிகம் தெரியாது. அதனால் சாப்பிடலாம்.
சுண்டைக்காய்ப் பொரியல் செய்ய தேவையானவை:
சுண்டைக்காய் : 100 கிராம்
வெங்காயம் : ஒன்று
பூண்டு : 10 பல்
காய்ந்த மிளகாய் : மூன்று
கடுகு : அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு : ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு : ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் : ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் :ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
சுண்டைக்காயைக் காம்பு நீக்கி, பத்து பத்து காய்களாக எடுத்து, லேசாக இடித்துக்கொள்ள வேண்டும். சுண்டைக்காயின் உள்ளேயிருக்கும் விதைகளை நீக்கப் பின்பற்றப்படும் இந்த வழிமுறையைத் தவறாமல் செய்ய வேண்டும். இடித்த சுண்டைக்காயை மஞ்சள்தூள் கலந்த நீரில் போட வேண்டும். மஞ்சள், சுண்டைக்காயின் நிறம் மாறாமலிருக்க உதவும். இப்போது கையால் லேசாக அழுத்தினாலே விதைகள் வெளியே வந்துவிடும். மஞ்சள் கலந்த நீரில் விதைகள் நீக்கிய சுண்டைக்காய்களை நன்றாக கழுவி, சுத்தமாக வடிகட்டிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய்விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, சுண்டைக்காயைச் சேர்த்துக் கிளற வேண்டும். உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சுண்டைக்காய் நன்றாக வெந்ததும், கறிவேப்பிலை, தோலுரித்துத் தட்டிவைத்திருக்கும் பூண்டு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். லேசாகக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
சுவையான சுண்டைக்காய் பொரியல் தயார்.
பலன்கள்…
• புரதம், கல்சியம், இரும்புச்சத்து நிறைந்த சுண்டைக்காய் உடல் வளர்ச்சிக்கு உதவும். வாரம் இரண்டு முறை இதைச் சாப்பிட்டால், ரத்தம் சுத்திகரிக்கப்படும் உடல் சோர்வு நீங்கும்.
செரிமானக் கோளாறுகளை நீக்குவதுடன், குடலையும் சுத்தமாக்கும். குடற்புழுக்களை வெளியேற்றும்.
• வறட்டு இருமல், சளி பிரச்னைகளைப் போக்க இது உதவும். சிறுநீரக நோயாளிகளுக்கு உகந்த மருத்துவ உணவு இது.
• ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலிருக்க உதவும். அதனால், ரத்தம் உறைதல் பிரச்னை தடுக்கப்படும். இதய நோயாளிகள், அடிக்கடி உணவில் சுண்டைக்காய் சேர்த்துக்கொள்வது நல்லது.
• கால்சியம் சத்து அதிகமிருப்பதால், பல் தொடர்பான பிரச்னைகளுக்கும் மருந்தாக இருக்கும்.
• காய்ந்த சுண்டைக்காய்ப்பொடியில், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம். வாரம் இரு முறை இந்தப் பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
• இரும்புச்சத்து நிறைந்தது என்பதால், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது.
• ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்னைகளை சுண்டைக்காய் சரிசெய்யும்.
• இன்சுலின் பயன்படுத்தாத சர்க்கரை நோயாளிகள் சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.