பெகஸுஸ் எனும் மென்பொருளை பயன்படுத்தி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாதாரண பொதுமக்கள் என சகலரையும் அரசாங்கம் கண்காணித்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
தனது சொந்த கட்சியினரையே அரசாங்கம் கண்காணிக்கிறது. தன்னிடம் மறைக்க எதுவுமில்லையென்றால் ஏன் இந்த கண்காணிப்பு நடவடிக்கையென கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில்,
பெகஸுஸ் (Pegasus ) எனும் மென்பொருள் ஒன்று அரசாங்கத்தினால் கையாளப்படுகின்றது, இந்த மென்பொருள் மிக ஆபத்தானது. இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்களின் கமராவில் உள்ள வீடியோவை கையாள முடியும். நீங்கள் எங்கு உள்ளீர்கள் என கண்டறிய முடியும். எனவே அரசாங்கம் எதிர்க்கட்சியை ஆராய்வதை விடவும் ஆளும் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதையே ஆராய்கின்றது என்ற விடயத்தை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.
தொலைத்தொடர்பு ஆணைக்குழு, ஏனைய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒன்றை கூறுகின்றேன். இவ்வாறான மோசமான செயல்களில் நீங்கள் சம்பந்தப்பட்டால் என்றாவது ஒருநாள் இந்த அரசாங்கம் கவிழும். அப்போது நீங்கள் பதில் கூறியாக வேண்டும்.
மக்களிடையே தனிப்பட்ட செயற்பாடுகள் இருக்க வேண்டும், அனைவருக்கும் அரசியல் நிலைப்பாடு என ஒன்று இருக்க வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு சுயமாக கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்க வேண்டும்.
இவ்வாறு மக்களை கட்டுப்படுத்த வெட்கமில்லையா என்றே அரசாங்கத்தை கேட்கிறேன். களவு, பொய், ஊழல் இல்லையென்றால் எதற்காக இவ்வாறான கீழ்மட்டமான செயல்களில் அரசாங்கம் ஈடுபடுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இங்குள்ள உறுப்பினர்கள் உரையாற்ற 8,10 நிமிடங்களே வழங்கப்படுகின்றன. ஆனால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்ற 60 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அவர் அந்த தாக்குதலில் தனக்கு தொடர்பில்லையென்று கூறி தன்னை சுத்தப்படுத்தத்தவே அரச தரப்பால் இந்த 60 நிமிடங்களும் அவருக்கு வழங்கப்பட்டன.
ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல என்பதை நான் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகின்றேன். இதற்காக சஹ்ரான் பாவிக்கப்பட்டுள்ளார். சஹ்ரானுக்கு இந்த அரசாங்கத்துக்கும் இருந்த தொடர்பு வெளிப்பட்டு வருகின்றது.
புலனாய்வு தகவல்களை வழங்குவதற்காக சஹ்ரானுக்கு நாங்கள் தான் சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின் போது பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அப்படியெனில் 2014க்கு முன்னர் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
ஏப்ரல் தாக்குதலை மேற்கொள்ள 2018 இடம்பெற்ற 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில்தான் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. 2018 இல் தான் வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்டனர். அதனை புலிகளின் மீது சுமத்தி அறைக்க முற்பட்டனர். அதனைத்தொடர்ந்து மாவனெல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவமும் 2018 இலே இடம்பெறுகின்றது.
சஹ்ரானின் நடவடிக்கையின் மோசமான நிலையை உணர்ந்து கொண்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தபோது, நாமல் குமார என்ற ஒருவர் திடீரென ஊடகங்களுக்கு முன் வந்து மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் இடம்பெறுகின்றதென்ற நாடகத்தை மேற்கொண்டார். அதனால் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா கைதுசெய்யப்பட்டு இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுவெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான விடயங்களை மறைக்க சில தரப்புக்கள் முயற்சத்தாலும், எப்பொழுதுதாவது அனைத்து தகவல்களும் வெளிச்சத்திற்கு வரும்.
அரசாங்கத்துடன் நெருக்கமான ஒரு நபர் ஆயுதங்களுடன் தொடர்புபட்டுள்ளதால், தாக்குதல்கள் குறித்த சந்தேகங்கள் எழுவதாக தெரிவித்தார். போஹோஹராம் குழுவிற்கு ஆயுதங்களை விற்றதாக அவர் குற்றம்சாட்டப்பட்டார்.
அத்துடன் மதங்களுக்கிடையில் பிரச்சினையும் முரண்பாடுகளும் ஏற்படுவதற்கு அரசியல்வாதிகளே காரணமாகும். இதற்கு சிறந்த உதாரணம் இந்த பிரதமர் நரேந்திர மோடி. அவர் 2019 தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டே வெற்றிபெற்றார். அதேபோன்றே 2019 ஏப்ரல் மாதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கோத்தாபய ராஜபக்ஷ் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என்ற அறிவிப்பை விடுத்தார்.அதனால் இதுவெல்லாம் சும்மா இடம்பெற்றதல்ல. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவையாகும் என்றார்.



