யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதியை விடுவிப்பதற்கு பதிலாக, தனியார் காணிகளிற்குள்ளால் புதிய வீதியொன்றை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.
இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவான் – மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக காணப்படுகிறது.
குறித்த 400 மீற்றர் நீளமான வீதியினை விடுவிக்க பல்வேறு கால கட்டங்களில் , பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.
அந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் , குறித்த வீதி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஆராயுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாக்கு உத்தரவிட்டு இருந்தார்.
அதனையடுத்து, குறித்த வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்ட போதும், தற்போது இராணுவத்தினர் அதிர்ச்சி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

தற்போதுள்ள உயர்பாதுகாப்பு எல்லையிலிருந்து 25 மீற்றர் தொலைவில் வீதி உள்ளது. எனினும், 25 மீற்றர் நகர்த்தாமல், வெறும் 6 மீற்றர்கள் மாத்திரம் நகர்த்த இராணுவத்தினர் தீர்மானித்துள்ளனர்.
எல்லையை 6 மீற்றர் நகர்த்துவதற்கு முன்பாக, அதற்குள் தனியார் காணிகளின் ஊடாக வீதி அமைத்து வருகின்றனர்.
இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் – முட் கம்பி வேலிக்குள்ளேயே இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருவதால், காணி உரிமையாளர்களால் அதனை தடுக்க முடியவில்லை. முட்கம்பி வேலிக்கு வெளியில் நின்று பெருச்சு விட மட்டுமே முடியும்.
தனியார் காணிகளிற்குள்ளால் வீதி அமைத்த பின்னர், இராணுவம் முட்கம்பி வேலியை சற்று பின்னகர்த்தி, அதனை மக்கள் பாவனைக்கு விட தீர்மானித்துள்ளது.
தனியார் காணிகளின் ஊடாக வீதி அமைக்கும் பணியில் இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அப்பகுதிக்கு செல்வோரை இராணுவத்தினர், இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
அத்துடன் புலனாய்வு பிரிவினர் அங்கு செல்வோரின் வாகன இலக்கங்கள் , உள்ளிட்டவற்றை பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளை , வீதி செப்பனிடல் பணிகள் உள்ளிட்டவற்றை செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.



