முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பகுதிக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் உந்துருளியில் கஞ்சா கடத்திய நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.
நேற்று (29) மாலை சுதந்திரபுரம் கரிசல்வெளி கடற்கரையில் உலங்கு வானூர்தி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடற்படையினர் பொலீஸ் விசேடஅதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சுதந்திரபுரம் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலீஸ் விசேட அதிரடிப்படையினர், 3 உந்துருளியில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர்.
இவர்களிடம் இருந்து 89 கிலோ பொதிசெய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மூங்கிலாறு பிரதேசத்தினை சேர்ந்த மூவர் மற்றும் விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் என 44, 24, 24, 30 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 உந்துருளிகளையும், கஞ்சாவையும் பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளனர்.
கடத்தல்காரர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்ட மூவர் மூங்கிலாற்று பகுதியினை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் சமூக மட்ட அமைப்புக்களின் பங்கு வகிப்பவர்.




