சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில்
நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி தனது முழுமையான ஆதரவைத்
தெரிவித்துக் கொள்கிறது என கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தின் போதும், அதன் இறுதி நாட்களில்
இடம்பெற்ற சம்பவங்களின் போதும் எண்ணற்ற உறவுகள் காணாமல்
ஆக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நமது கண்முன்னே இராணுவத்தினரிடம்
நம்பிக்கையுடன் கையளிக்கப்பட்ட ஏராளமான உறவுகளும் இன்று வரை என்ன
ஆனார்கள் என்பது தெரியாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில்
உள்ளனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்கள்
மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் அடங்குகின்றனர்.
தங்களது அன்பிற்குரிய உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த உண்மையை
அறிய தவிக்கும் குடும்பங்களின் கேள்விகளுக்கு, இதுவரை ஆட்சியில் இருந்த
எந்தவொரு அரசும் முறையான, உண்மையான பதில்களை வழங்கவில்லை. சர்வதேச
சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், அவர்களைத்
திருப்திப்படுத்தவும் மட்டுமே அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும்
போலியான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனவே அன்றி, பாதிக்கப்பட்ட
உறவுகளுக்கான நீதியை இதுவரை பெற்றுத்தரவில்லை. அரசாங்கங்களின் இந்த
அலட்சியப் போக்கையும், பொறுப்பற்ற தன்மையையும் சமத்துவக் கட்சி
வன்மையாகக் கண்டிக்கிறது.
நீதிக்காகத் தொடர்ந்து போராடி வரும் உறவுகளின் குரலுக்கு வலுச்சேர்க்கும்
வகையில், யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்டுள்ள இம்மாநாடு மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இம்மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி தனது
பூரண ஆதரவை வழங்குவதோடு, கடந்த காலங்களைப் போலவே காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளின் நீதிப் போராட்டத்திற்கான எமது பங்களிப்பும் தொடரும் என்பதை
உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவ்வறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.




