ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் தலிபான்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று ஆப்கானிஸ்தான் சுயாதீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இருவரும் வீட்டில் வரையறுக்கப்பட்ட மக்களை சந்திக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹமீத் கர்சாய் இப்போது அப்துல்லாவின் வீட்டில் வசிப்பதாப தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியதிலிருந்து, ஹமீத் கர்சாய், அப்துல்லா அப்துல்லா மற்றும் குல்பதின் ஹேக்மத்யார் மட்டுமே காபூலில் தலிபான் தலைமை மற்றும் பழங்குடி பெரியவர்களுடன் அடிக்கடி கூட்டங்களை நடத்துகின்றனர்.
ஒரு கவுன்சிலையும் உருவாக்கிய மூவரும் தலிபான்களால் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தை வழிநடத்த திட்டமிட்டுள்ள 12 உறுப்பினர்கள் கொண்ட பெரிய கவுன்சிலின் உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது.
வரவிருக்கும் கவுன்சிலில் மூவருக்கும் நிர்வாக அதிகாரம் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தலிபான்கள் இன்னும் வரவிருக்கும் அரசாங்கத்தின் வடிவத்தை விவாதிப்பதில் மும்முரமாக உள்ளனர். ஆனால் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதாக அடிக்கடி உறுதியளித்தனர்.
கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சரும், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் செய்தி தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் காபூலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மத அறிஞர்கள்-உலமா அரசாங்கத்தை வழிநடத்துவார் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



