இலங்கையை சார்ந்த ஒருவர் சட்டவிரோதமாக அட்டை பண்ணை அமைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சீன நாட்டவர் அமைத்தால் அவர்களுக்கு சட்ட நடவடிக்கை இல்லையா என கேள்வி எழுப்புகிறார் கிளிநொச்சி மாவட்ட மீனவ
சம்மேளனத்தின் தலைவர் வைத்திலிங்கம் பாலசுரேஷ்.
கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சி கௌதாரி முனையில் உள்ள பூவரசன் தீவில் சட்டவிரோதமாக சீன
நாட்டவர்கள் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அட்டை பண்ணை அமைத்து தொழிலை
மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவர்களை தடுப்பதற்கு அரசியல்வாதிகளோ அதிகாரிகளுக்கு தைரியமில்லை. எமது
மக்கள் இவ்வாறு செயற்பட்டால் உடனடியாக அவற்றை பிடுங்கி எறிந்து விடுவார்கள். சீனா நாட்டவருக்கு ஒரு சட்டம். இருப்பவர்களுக்கு இன்னொரு சட்டம் என கவலை தெரிவித்துள்ளார் மீனவ சங்கத்தின் தலைவர்.
இதேபோன்று நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோனா காரணமாக
பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது. இதனால் கல்வி கற்கும்
மாணவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் கல்வியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இணைய வழியிலான கல்வியை மேற்கொள்ள முடியாமல் பல கிராமங்கள் காணப்படுகின்றது.
இணைய வழி கல்வியை மேற்கொள்ள வசதிபடைத்தவர்களிடம் கைத்தொலைபேசியை பாவித்து பிள்ளைகளை கல்வியில் மேற்கொள்ள வைக்கின்றார்கள். வசதி இல்லாதவர்களுக்கு கைத்தொலைபேசியும் இல்லை. பின்தங்கிய கிராமங்களுக்கு இணைய வழி கல்வியை மேற்கொள்ள தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட மீனவ சம்மேளனத்தின் தலைவர் வைத்திலிங்கம் பாலசுரேஷ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.




