வேடசந்தூரை சேர்ந்த மாணவன் உலக ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சார்பில் வேடசந்தூரை சேர்ந்த ரெத்தின் பிரணவ் பங்கேற்க உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்-ஸ்ரீமதி ஆகியோரின் மகன் ரெத்தின் பிரணவ். 13 வயதாகும் இவர் தற்போது பெங்களூரில் உள்ள ”The Sports School” பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் சிறுவயது முதலே டென்னிஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரின் ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை மற்றும் குடும்பத்தார் ரெத்தின் பிரணவை 7 வயதிலேயே டென்னிஸ் பயிற்சியில் சேர்த்துவிட்டார். அதன் பின்னர் ரெத்தின் பிரணவ் இந்தியா மற்றும் ஆசியா அளவில் நடைபெற்ற ஏராளமான போட்டிகளில் பங்கேற்று 50-க்கும் அதிகமான வெற்றிக் கோப்பைகளை வென்றுள்ளார். 3 முறை தேசிய சேம்பியன்சிப் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் கசகஸ்தான் நாட்டில் நடக்கவுள்ள 14 வயதானோருக்கான ஜூனியர் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தகுதி சுற்றில் இந்தியா சார்பாக விளையாடுவதற்கு ரெத்தின் பிரணவ் தேர்வாகியுள்ளார். மேலும் இந்தியாவிற்காக விளையாட தேர்வாகியுள்ள ஒரே தமிழக வீரர் ரெத்தின் பிரணவ் என்பதும் குறிப்பிடதக்கது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அளவில் 12 மற்றும் 14 வயதுடைய டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் ரேங்கில் நீடித்து வந்ததால் அவர் இந்தியா சார்பாக விளையாட தேர்வாகியுள்ளார். தற்போது அதற்கான அறிவிப்பு ஆணை அகில இந்திய டென்னிஸ் சங்கத்திலிருந்து ரெத்தின் பிரணவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ரத்தின் பிரணவ் கடந்த 2019ஆம் ஆண்டு 12 வயதானோருக்கான ஜூனியர் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கக்கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



