காலா படத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகனாக நடித்திருந்த நிதிஷ் வீரா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டாம் அலையில் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
நடிகர் நிதிஷ் வீராவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 45. விஜயகாந்தின் வல்லரசு படம் மூலம் நடிகரானவர் நிதிஷ் வீரா.
தனுஷின் புதுப்பேட்டை படத்திலும் நடித்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தான் அவர் பிரபலமானார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் அவருக்கு மகனாக நடித்தார் வீரா. நான் ரஜினி சாருக்கு மகனாக நடித்தது பெரிய கௌரவம் என்று சொல்லி, சொல்லி மகிழ்ச்சி அடைந்தார்.
தனுஷ் நடித்த அசுரன் படத்திலும் நிதிஷ் வீரா நடித்திருந்தார். மேலும் அண்மையில் மரணம் அடைந்த எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய லாபம் படத்திலும் நடித்துள்ளார்.
நிதிஷ் வீரா இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
கனா இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்
முன்னதாக இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 38. சிந்துஜா இறந்த செய்தி வெளியான வேகத்தில் நிதிஷ் வீராவும் கொரோனாவால் இறந்துவிட்டார் என்பதை அறிந்தவர்கள் இந்த ஆண்டு இதை விட மோசமாக முடியாது என்கிறார்கள்.




