திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1 கிலோகிராம் எடையுள்ள சிறுநீர்ப்பைக் கல் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இது, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கற்களில் ஒன்றாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளியின் வயிற்றுப் பகுதியில் ஒரு கட்டி இருப்பது ஆரம்பகட்டப் பரிசோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக் குழுவில் அங்கம் வகித்த ஒரு மருத்துவரின் கூற்றுப்படி, மேலதிக விசாரணைகளில் அந்தக் கட்டி உண்மையில் ஒரு பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு நிபுணர்கள் குழுவால் அந்த நோயாளி அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்தப்பட்டு, ஓகஸ்ட் 14 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது அகற்றப்பட்ட கல்லின் எடை 3.1 கிலோகிராம் என்றும், அதன் நீளம் 14 முதல் 19 சென்டிமீட்டர் வரை இருக்கும் என்றும் அந்த மருத்துவர் கூறினார்.
இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்ற வகையில், இந்தக் கல் கின்னஸ் உலக சாதனைக்குத் தகுதி பெறக்கூடும் என்று மருத்துவமனை இயக்குநர் கூறினார்.




