கன்னியாகுமரி காமுகன் காசி பாணியில் வயது வித்தியாசமின்றி ஏராளமான பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததுடன், நகை பணமும் பறித்து வருவதாக சைமன் இன்னிசைக் குழுவை சேர்ந்த மைக் ஸ்டீபன் மீது அவரது மனைவி பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
மதுரை சைமனின் மேஸ்ட்ரோ இன்னிசைக்குழுவில் பாடகியாக இருந்தவர் கோபிகா, இவரும் அதே குழுவின் முக்கிய இசைக்கலைஞரான மைக் ஸ்டீபனும் சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவர் மைக் ஸ்டீபன் மன்மதன் போல வலம் வருவதாகவும், வயது வித்தியாசமின்றி கையில் சிக்குகின்ற பெண்களை எல்லாம் மயக்கி காதல் வலையில் சிக்கவைத்து அவர்களது வாழ்க்கையை சீரழித்து வருவதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கோபிகா தெரிவித்துள்ளார்.
மேடை கச்சேரிக்கு செல்லும் இடங்களில் பெண்களின் செல் நம்பரைப் பெற்று அவர்களுக்கு காதல் வலை விரிப்பதில் கில்லாடியான மைக் ஸ்டீபன், அந்த பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிப் பணம் பறித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார் அவரது மனைவி கோபிகா..!
வயது வித்தியாசமின்றி பெண்களிடம் மைக்ஸ்டீபன் ஆடைக் கச்சேரி நடத்தி வருவதாக ஆதங்கப்படும் கோபிகா, இந்த உண்மையை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக தன்னை அவர் மிரட்டி வைத்திருந்ததாகவும், பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கோபிகா தெரிவித்தார். புகாருடன் ஆதாரமாக மைக் ஸ்டீபன் மன்மதனாக மற்ற பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ஒப்படைத்தார்.
திருட்டுப்பூனையாக வலம் வந்த மைக் ஸ்டீபனின் இந்த சேட்டைகளுக்கு அவரது தாய் தந்தை இருவரும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுவதால் அவர்களிடமும் விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கொரோனா 2 வது அலையால் மூச்சுவிட இயலாமல் அரசு மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்க மன்மதனாக வலம் வரும் மைக் ஸ்டீபன், மைக் டைசன் லெவலுக்கு செய்த வில்லங்க சேட்டைகள் அவரது மனைவி மூலம் வீதிக்கு வந்திருக்கின்றது.




