முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறார்களான இருவரும் தனியார் விடுதியொன்றில் அறையெடுத்து தங்கியிருந்துள்ளனர். அவர்களுக்கு அறையொதுக்கிய குற்றச்சாட்டில் விடுதியின் பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த4ஆம் திகதி காலை 6 மணிக்கு தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக குறிப்பிட்டு விட்டு சென்ற சிறுமி, தனது காதலனான 17 வயது சிறுவனுடன் விருந்தினர் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
சிறுமி கல்வி நிலையத்திற்கு வரவில்லையென ஆசிரியர், சிறுமியின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தெரிவித்ததை தொடர்ந்து, காலை 8 மணியளவில் குடும்பத்தினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான ஒருவரின் நடமாட்டத்தை அவதானித்து, அவரை பிடித்து விசாரித்த போது, சிறுமியும், சிறுவன் ஒருவரும் அருகிலுள்ள விடுதி அறையில் தங்கியிருந்தது தெரிய வந்தது.
சந்தேகத்திற்கு இடமான அந்த 28 வயதான இளைஞன், சிறுமியின் காதலான 17 வயது இளைஞனின் நண்பன். அவரது ஏற்பாட்டிலேயே அந்த விடுதியில் தங்கியுள்ளனர்.
அந்த விடுதிக்கு குடும்பத்தினர் சென்று, இருவரையும் பிடித்த போது, தாங்கள் நண்பர்கள் என்றும், அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும் காதலன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த சிறுவனை பொலிசார் விடுவித்தனர்.
பின்னர் சிறுமி முல்லைத்தீவு வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது பரிசோதனை அறிக்கை 19ஆம் திகதி வெளியானது. அதில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் காதலன் கைது செய்யப்பட்டார். அந்த ஜோடி தங்கியிருக்க அறையொதுக்கிய விடுதி பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்கள் தங்குவதற்கு ஆதரவாக செயற்பட்ட 28 வயதானவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த ஜோடி தங்கியிருந்த விடுதி, முல்லைத்தீவிலுள்ள தேசிய மக்கள் சக்தி பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது. அவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சர்கள் முல்லைத்தீவு வரும் போது அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அதே விடுதியில் சிறார்களான ஜோடியொன்றும் தங்கியிருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



