யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன கூட்டாக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (5) சிறிதர் தியேட்டருக்கு சென்று ஆட்சியமைக்க ஆதரவு கோரினார்.
இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியினர் (மணிவண்ணன்) இலங்கை தமிழ் அரசு கட்சி, டக்ளஸ் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. நல்லூர் பிரதேசசபையில் தம்மை ஆட்சியமைக்க வாய்ப்பளிப்பவர்களுக்கு ஆதரவு என் மணி அணி நிலைப்பாடு எடுத்தது.
இலங்கை தமிழ் அரசுயுடனான பேச்சில், முதல் இரு வருடத்தை தாம் எடுப்பதாகவும், அடுத்த இரு வருடங்களை மணி அணி எடுக்குமாறும் தமிழ் அரசு கட்சி கூறியது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான பேச்சில்- 4 வருடங்களையும் மணி அணிக்கே வழங்குவதாக குறிப்பிட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தம்மிடம் முழுமையாக ஆட்சியை வழங்க தயாராகவுள்ளது என்ற செய்தியை இலங்கை தமிழ் அரசு கட்சியிடம் தெரிவித்த மணிவண்ணன், தமிழ் அரசு கட்சி ஆட்சியில் பங்கேற்கக்கூடாது என கேட்டார். அப்படி தராவிட்டால் சங்கு தரப்பை ஆதரிக்கப் போவதாக பேரம் பேசினார்.
இறுதியில், மணி அணிக்கே நல்லூரை வழங்கலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி, மணிவண்ணன் கூட்டணி அமைந்துள்ளதால் கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் ஆகிய பிரதேசசபைகள் தமிழரசு கட்சியிடமிருந்து பறிபோவது தடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, யாழில் சாவகச்சேரி பிரதேசசபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, ஊர்காவற்துறை பிரதேசசபைகளை தமிழ் தேசிய பேரவையும், நல்லூரை மணி அணியும், ஏனையவற்றை இலங்கை தமிழ் அரசு கட்சியும் கைப்பற்றும் நிலைமையுள்ளது.
தேசிய மக்கள் சக்தி எடுக்கும் நிலைப்பாடே இதில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
எனினும், தேசிய மக்கள் சக்தி எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமலிருக்க வாய்ப்புள்ளது. ஜேவிபி தலைமையிடம், இலங்கை தமிழ் அரசு கட்சி இந்த கோரிக்கையை விடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



