இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பி தலைமையகமான சிறிதர் தியேட்டருக்கு சென்று, உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைக்க ஆதரவு கோரியுள்ளார்.
இன்று (5) மாலை சிறிதரன் தியேட்டருக்கு சீ.வீ.கே.சிவஞானம் சென்றார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் அல்லது பிரதானியொருவர் ஈ.பி.டி.பி தலைமையகத்துக்கு ஆதரவு கோரி சென்ற முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
“சீ.வீ.கே.சிவஞானம் இன்று சிறிதர் தியேட்டருக்கு வந்து, உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைக்க ஆதரவு கோரினார். உள்ளூராட்சிசபைகளில் ஆளும் தரப்பாக அல்லாமல் எதிர்தரப்பாக இருந்து மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதே இம்முறை எமது திட்டம். ஊர்காவற்துறை பிரதேசசபையிலும் ஆட்சியை கைப்பற்ற முயலமாட்டோம். உங்களது கோரிக்கையை கட்சியுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவொன்றை அறிவிக்கிறேன் என சீ.வீ.கே.சிவஞானத்திடம் தெரிவித்தேன். அவர் எமது அலுவலகம் வருவது இது முதல் முறையல்ல. முன்னர் பல முறை வந்து சென்றிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகாலமாக உறவும், தொடர்பும் உள்ளது“ என டக்ளஸ் தேவானந்தா தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
வி.மணிவண்ணன் அணியினரும் தம்மை ஆதரிக்கவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் இந்த சந்திப்பில் தெரிவித்ததாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.



