வேட்பாளர் தெரிவில் குளறுபடி: ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் கூட்டணி கட்சிகள் அதிருப்தி!

Date:

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் விவகாரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி குளறுபடி செய்ததையடுத்து, கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் செயற்படுவதெனில் தன்னிச்சையாக செயற்பட முடியாதென்றும், தான் தோன்றித்தனமாக செயற்படுவதெனில் கூட்டமைப்பை விட்டு வெளியேறுமாறும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் இன்று (7) இரவு அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்ட ஆசனப்பங்கீட்டில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடந்த குளறுபடிகளை பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி போன்ற சிறிய, கட்டமைப்பில்லாத கட்சிகள்- போட்டி போட்டுக்கொண்டு ஆசனங்களை பெறுவதும், பின்னர் அவற்றை தகுதியானவர்களை கொண்டு நிரப்ப முடியாமல், மக்கள் ஆதரவு துளியும் இல்லாதவர்களை போட்டு, பட்டியலை நிரப்புவதும் நடக்கும், கடந்த உள்ளூராட்ச தேர்தலிலும் இதுதான் நடந்தது என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

தற்போது அதுதான் நடந்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் தமக்கு இரண்டு ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எவ் உடும்புப்பிடி பிடித்தது. சுரேஸ் பிரேமச்சந்திரன் போட்டியிடுவதுடன், கிளிநொச்சியில் ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டுமென அவருக்கு கூறப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

இன்று வேட்புமனு கையெழுத்திட்ட போது, ஈ.பி.ஆர்.எல்.எவ் குளறுபடியில் ஈடுபட்டது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒருவரை அழைத்துச் சென்று, இவர்தான் கிளிநொச்சி வேட்பாளர் என கையெழுத்திட வைத்தார். அவர் பருத்தித்துறையை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் சிவகுமார். எந்த தேர்தலிலும் குறிப்பிடும்படியான வாக்கை பெற்றவரல்ல. சுரேஸ் பிரேமச்சந்திரனின் நிழலாக திரிபவர் என்ற காரணத்தினால் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிருப்தி தெரிவித்த போது, சிவகுமாரின் பூர்வீகம் கிளிநொச்சி என ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நடவடிக்கையால் கூட்டணியிலுள்ள கட்சிகள் அதிருப்பியடைந்துள்ளன. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாதென ஏனைய கட்சிகளும் கூறியதையடுத்து, இது குறித்து ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புடன் கலந்துரையாட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று இரவு கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்கள்.

இந்த கலந்துரையாடலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுமென்றும், கூட்டமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் வெளியேறுமாறும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு நேரடியாக கூறப்படுமென அறிய முடிகிறது.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்