எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டிற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.
இதேநேரம் தமிழர்களின் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம் – இரண்டு” போராட்டத்தின் இறுதி நாளில் வாசிக்கப்பட்ட அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தாயகச் செயலணி தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் குறித்த அறிக்கை நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியம் சார்ந்த அமைப்புகளும் அதற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதுடன், அறிக்கையில் கையொப்பமிட்டுத் தர வேண்டும் எனவும் தாயகச் செயலணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு தமிழர் தாயகம் தழுவிய ரீதியில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மற்றும் தெருக்கூத்துகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வீதி நாடகங்கள் தத்தமது ஊர்களுக்கு வருகை தரும் போது, பொதுமக்கள் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் தாயகச் செயலணி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று, வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அதனை சிறப்பிக்க வேண்டும் எனவும் தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.




