பொலிவியா தலைநகர் லா பாஸில் உள்ள அதிபர் மாளிகையை ராணுவப் படையினர் சுற்றி வளைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சதிப்புரட்சி செய்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி மேற்கொண்ட ராணுவ தலைவரை பொலிவிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முக்கிய அரசாங்க கட்டடங்கள் அமைந்துள்ள முரில்லோ சதுக்கத்தில் (Murillo Square) ராணுவத்தின் கவச வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்களை நிலை நிறுத்தியிருந்தனர். அவர்கள் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் கட்டடங்களை விட்டு வெளியேறினர்.
கிளர்ச்சி ராணுவத் தலைவரான ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா (Gen Juan José Zúñiga), தான் “ஜனநாயகத்தை மறுசீரமைக்க” விரும்புவதாகவும், அதிபர் லூயிஸ் ஆர்ஸை மதிக்கும் அதே வேளையில், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் லூயிஸ் ஆர்ஸ் (Luis Arce), “ஜனநாயகத்திற்கு ஆதரவாக ஒன்றுகூடி அணி திரள வேண்டும்” என்று மக்களை வலியுறுத்தினார்.




