இலங்கை காங்கேசன்துறை- இந்தியா நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும் இடையே 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்தக் கப்பல் தினசரி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டாததால் அது வாரத்திற்கு மூன்று நாட்கள் என குறைக்கப்பட்டது. அதற்கும் போதிய பயணிகள் இல்லாததால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் இன்ட்ஸ்ரீ என்ற நிறுவனம் கப்பல் இயக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொண்டு இம்மாதம் 13ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதாக அறிவித்தது. ஆனாலும் அன்றைய தினம் தொடங்கப்படாமல் மே 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிர்வாக அனுமதி மற்றும் கடல் சார் வணிக உரிமம் ஆகியவற்றின் காரணமாக, அன்றைய திகதியிலும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படாமல் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரி செய்தால் மட்டுமே உரிய அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என இன்ட்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு செலுத்திய கட்டணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறை களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் எமது திட்டமிட்ட நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவையை இயக்க முடியவில்லை. மிக விரைவில் புதிய பயண திகதிகள் அறிவிக்கப்படும். இதுவரை கப்பல் பயணத்துக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள் செலுத்திய முழு கட்டணத் தையும் முழுமையாக திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




