பருத்தித்துறை புலோலி மேற்குப்பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறி மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தை நடத்தியவர்கள் பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்டினால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சமூகஇடைவெளியைப் பேணாமலும் முகக்கவசங்கள் இன்றியும் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று மதுபோதையில் மேளவாத்தியங்களை முழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர் வழங்கிய அறிவுறுத்தல்களை கணக்கிலெடுக்காமலும், கடமைக்கு இடையூறு செய்ய முயன்றும் சிலர் நடந்து கொண்டனர்.
இவ்வாறு நடந்து கொண்ட மேள வாத்தியக்காரர்கள், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பலர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்துடன் கற்கோவளம் பகுதியில் அம்மன் கோயிலொன்றில் அனுமதியின்றி திருவிழா நடத்தி, இரவு நேரத்தில் நிகழ்ச்சிகளையும் அனுமதியின்றி மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூட காரணமாக இருந்தவர்களும் அவர்களது வீடுகளில் பொது சுகாதார பரிசோதகரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் பத்தாம் நாளில் மேற்கொள்ளப்பட்டு சுயதனிமைப்படுத்தல்காலம் பதினான்கு நாட்கள் முடிவுற்றபின் சட்டநடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




