கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சைவ ஆலயங்களை மட்டுமே குறிவைத்தவையாக இருக்கக்கூடாது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், நயினாதீவு நாகதீபம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டிடங்களிலும் ஒரேவிதமாக நடைமுறையே பின்பற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்.
யாழ் குடாநாட்டில் சைவ ஆலயங்களின் திருவிழாக்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், தென்னிலங்கையிலிருந்து ஆட்களை வரவழைத்து நயினாதீவு நாகவிகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகளை நடத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே மேற்படி கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் சுகாதார கட்டுப்பாடுகள் மிக தீவிரமாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அது சைவ ஆலயங்களிற்கு மட்டும் இருக்கக்கூடாது. சைவ ஆலயங்களிற்கு செல்பவர்கள்மட்டுமே கொரோனாவை பரப்புவார்கள் என்று இல்லை.
சைவ ஆலயங்களிற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், நடைமுறைகளும் நாகதீபம் உள்ளிட்ட ஏனைய மதத்தலங்களிலும் அமுல்ப்படுத்துவதன் மூலம்தான் உண்மையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்..
இதை, சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.