போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் 19 ஒப்பந்த கொலைகளை செய்ததாக கூறியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மாகந்துரே மதுஷ் உட்பட முன்னணி பாதாள உலக தலைவர்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றியதாகவும் சந்தேக நபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய இந்த சந்தேக நபர், தங்கல்லே சுத்தா என அழைக்கப்படும் நிலந்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், உனவடுன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் 19 கொலைகளை செய்ததாக கூறியுள்ள போதிலும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




