எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தாம் முனைப்புடன் செயற்படப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்ற அறையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிரேஷ்ட உப தலைவர் கயந்த கருணாதிலக்க ஆகியோருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஏனைய உறுப்பினர்கள் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதித் தேர்தலில் நியமித்தமை தொடர்பில் கட்சித் தலைமை எடுத்த தீர்மானம் தவறானது என பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் தற்போது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ஆற்றிவரும் பாத்திரத்தை அவரால் செய்ய முடியுமா என பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பை நிராகரித்தமையும் அவரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அந்த பொருளாதார நிபுணர்களின் பேச்சைக் கேட்டு சஜித் பிரேமதாச அரசியல் முடிவுகளை எடுப்பது மிகவும் தவறானது என தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் சரத் பொன்சேகா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நிர்வாகத்திற்கு ஓரளவிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், கட்சி விசேட தீர்மானங்களை எடுக்கும் போது, பொன்சேகா அந்த சந்தர்ப்பங்களை தவிர்ப்பதாகவும், கலந்துரையாடல்களிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகை தாமதமானால், பொன்சேகா காத்திருக்காமல், உரிய கலந்துரையாடல்களில் பங்கேற்காமல் வெளியேறுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், இந்த விடயங்கள் குறித்து பொன்சேகாவுடன் கலந்துரையாடுவதற்கு சஜித் பிரேமதாசவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.




