மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூப் சனலில் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக முஸ்லிம் அமைப்புகள் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கணணி குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், சந்தேகநபர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டு, கணினி குற்றச் சட்டத்தின் 6ஆவது பிரிவு மற்றும் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 291ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இதன்படி இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (06) ஆஜராகுமாறு இந்திக்க தொட்டவத்தவிற்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




