பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்து, குறித்த சட்டமூலத்தை விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுமாறு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. .
சட்டத்தரணி சுனில் வதகல தாக்கல் செய்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த சட்டமூலத்தின் மூலம் பயங்கரவாதம் சரியாக விளக்கப்படவில்லை. இந்த சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவு தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் நபர்களை கூட கைது செய்ய வகை செய்துள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சுதந்திரத்தை இழக்கும் வகையிலும், அதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் இந்த சட்டமூலம் அமையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் சட்டமூலத்தை நிறைவேற்ற உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளார்.




