துறைமுக நகரத்திற்கு வழங்கப்படும் சுயாட்சியை வடக்கு, கிழக்கிற்கு வழங்கியிருந்தால் எப்பொழுதோ இலங்கையின் மிகப்பெரிய பிரச்சனையான இனப்பிரச்சனை தீர்ந்திருக்கும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன்.
இன்று நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின்படி எப்படியான அதிகாரங்கள் அந்த பகுதிக்கு வழங்கப்பட போகிறது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், கிடைக்கிற தகவல்படி, சட்டமூலத்தின் சில பரிந்துரைகளின்படி இது ஆபத்தான ஒரு திட்டம். ஆணைக்குழுவில் உள்ள உறுப்பினர்களாக வெளிநாட்டவர்களும் நியமிக்க இடமுள்ளது.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களை துறைமுக நகரத்திற்கு சீன தூதரகம் அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தது. இலங்கைக்குள் உள்ள ஒரு பகுதியை, இலங்கை பாராளுமன்ற உறு்ப்பினர்களை காண்பிக்க அழைத்து செல்வதென்பது நல்ல விடயமல்ல. ஆரோக்கியமான விடயமுமல்ல.
துறைமுக நகரத்தின் நிர்வாக அதிகாரங்களை சீனாவிடம் வழங்க முடியுமாயின்- இரண்டும் வேறுவேறு என்றாலும்- தமிழ் மக்களின் அரசியல், நிர்வாக உரிமையை வழங்குவதில் என்ன பிரச்சனையென கேட்கிறேன்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி, எமது பிரதேசத்தில் எம்மை நாமே நிர்வகிக்க கோரி நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். அரசியல், நிர்வாக ரீதியான எம்மை நாமே நிர்வகிக்கும் அதிகாரங்களை கோரி நிற்கிறோம். துறைமுக நகரத்தில் நிர்வாகத்தை சீனாவிடம் வழங்க முடியுமாயின், வடக்கு கிழக்கு நிர்வாக அதிகாரங்களை இந்த நாட்டு பிரஜைகளான தமிழர்களிடம் வழங்குவதில் என்ன பிரச்சனை? என்றார்.




