வர்த்தக நிலையமொன்றில் தொலைபேசி திருடிய இளைஞனை, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
நவகமுவ பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
அசேல சானுக திலேசன் (30 ) என்பவரே உயிரிழந்தார்.
கடந்த 7ஆம் திகதி மதியம் தொலைபேசி வர்த்தக நிலையத்திற்கு சென்ற இளைஞன், அங்கிருந்து தொலைபேசியொன்றை திருடிச் சென்றுள்ளார்.
தொலைபேசியை திருடிய இளைஞன் என கடை உரிமையாளர் ஒரு இளைஞன் மீது சந்தேகம் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இளைஞன் பேஸ்புக்கில், திருடிய கைத்தொலைபேசியை விற்பனை செய்ய விளம்பரம் செய்தார்.
இதை பார்த்த கடை உரிமையாளர், கடை சிசிரிவி கமராவில் பதிவான வீடியோவை சரி பார்த்தார்.
திருடிய போது அணிந்திருந்த ஆடையையே, பேஸ்புக் கணக்கில் உள்ள புகைப்படத்திலும் இளைஞன் அணிந்திருந்தார்.
இதையடுத்து, தொலைபேசி வாங்குபவர் போல நடித்து, இளைஞனை தொடர்பு கொண்டு, கடுவெல பகுதிக்கு அழைத்தார்.
தொலைபேசி விற்பனை செய்ய கடுவெலவிற்கு சென்ற இளைஞனை, கடை உரிமையாளரும் மற்றும் சிலரும் பிடித்து, வாகனம் ஒன்றில் ரணல சந்திக்கு கொண்டு வந்தனர்.
அங்கு மின்சார கம்பத்தில் இளைஞனை கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
திருடிய கைத்தொலைபேசியை எடுத்து தருவதாக சில இடங்களிற்கு அழைத்துச் சென்ற இளைஞன், தப்பியோட முயன்றுள்ளார்.
அவரை மேலும் கடுமையாக தாக்கிய கடை உரிமையாளரும், குழுவினரும், கயிற்றால் கட்டி முச்சக்கர வண்டியில் நவகமுவ பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இளைஞன் ஆபத்தான நிலையில் இருந்ததால், உடனடியாக நவகமுவ வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
வர்த்தக நிலைய உரிமையாளரும், மேலுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



