மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவு மற்றும் சந்திவெளி பொலிஸ் பிரிவுகளில் பல்வேறுபட்ட திருட்டு சம்பவங்களில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் 6 பேரினை கல்குடா பொலிசார் இன்று (6) கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பெருமளவான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.சந்தனவிதானகே தெரிவித்தார்.
இதன்போது தண்ணீர் மோட்டர்-12, மோட்ட சைக்கிள்-1, துவிச்சக்கர வண்டி-2. மின்விசிறி-1, இலத்திரனியல் தராசு, தங்க நகைகள் சில, என பல பொருட்க்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்குடா பொலிஸ் பிரிவின் கல்மடு, மருதநகர், வெம்பு, பேத்தாழை, கல்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் சந்திவெளி பொலிஸ் பிரிவின் கிரான், சித்தாண்டி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் இவ் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இரவு வேளைகளில் பிரதேசத்தில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு சென்று குழுவாக செயற்பட்டு திருடி வந்துள்ளனர்.
திருட்டு நடவடிக்கை தொடர்பாக கல்குடா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.சந்தனவிதானகே உட்பட பொலிஸ் குழுவினர் இணைந்து செயற்பட்டு திருட்டு நடவடிக்கையினை முறியடித்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கல்குடா பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞர்கள் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இதன்போது திருடப்பட்ட பொருட்க்களை வாங்கியோர்கள் மற்றும் அவற்றினை குறைந்த விலையில் விற்பனைக்கு உதவியவர்கள் என பலர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கல்குடா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

-க.ருத்திரன்-



