திருமதி இலங்கை அழகிப் போட்டியின் வெற்றியாளராக புஷ்பிகா டி சில்வா மீண்டும் அறிவிக்கப்படுவார் என, போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
திருமணமான பெண்களிற்கான உலக அழகிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அழகியை தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி, நேற்று இரவு கொழும்பு சினமன் கார்டன் ஹொட்டலில் நடந்தது. இதன்போது, வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கிரீடம் பறிக்கப்பட்டிருந்தது.
இதனால் மேடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
திருமதி இலங்கையாக தெரிவானபுஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றதாகக் கூறி, அவருக்கு சூட்டப்பட்ட கிரீடத்தை முன்னாள் இலங்கை, உலக அழகியான கரோலின் ஜூரி எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது கரோலின் ஜூரி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், ரன்னரை வெற்றியாளராக அறிவித்தார். இதை தொடர்ந்து நிகழ்வில் பதட்டமான சூழ்நிலை எழுந்தது.
புஷ்பிகா டி சில்வாவிடமே அழகி பட்டத்திற்கான கிண்ணம் மீள வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் அழகி கரோலின் ஜூரி மகுடம் சூட்டும் வரை இந்த விஷயத்தில் ஒரு பிரச்சினையை எழுப்பவில்லை என்றும், புஷ்பிகா டி சில்வாவுக்கு எதிரான கூற்றுக்களை நிரூபிக்க எந்த ஆவணமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில்,இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்றும், தான் விவாகரத்து செய்யவில்லை என்றும் தனிப்பட்ட காரணங்களால் தனது மகனுடன் தனியாக வசித்து வருவதாகவும் புஷ்பிகா டி சில்வா தெரிவித்தார்.
புஷ்பிகா மேலும் கூறுகையில், இந்த நிகழ்வில் போட்டியிடுவதற்கு முன்னர் அவரது நிலை குறித்து அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது, மேலும் அவர் பொருத்தமற்றவராக இருந்தால் அவர் முன்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார் என்றார்.
கிரீடம் அகற்றிய சர்ச்சையில் தான் தலையில் காயமடைந்துள்ளதாகவும், இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.




