அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட3 பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
மக்கள் போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுகிறார்கள், பயங்கரவாத தடைச்சட்டம் தவறாக பிரயோகிக்கப்படுகிறது என்ற உள்ளூர், சர்வதேச கவலைகளை புறம்தள்ளி இந்த அதிர்ச்சி முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
மக்கள் போராட்டக்காரர்கள் 3 பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அனுமதித்து ஜனாதிபதி கையெழுத்திட வேண்டாம், அப்படி கையெழுத்திடுவது இலங்கையின் இருண்ட நாள் என நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், இன்று தடுப்பு காவல் உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.
ஓகஸ்ட் 18 கொழும்பில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, வசந்த முதலிகே, பூஜ்ய கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷான் குணதிலக்க உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வசந்த முதலிகே, பூஜ்ய கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோர் 72 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.




