யாழ்ப்பாண நகரில் சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால் சிறு வியாபாரிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது.
அத்துடன் வலிகாமம் வடக்கு பகுதியில் அபகரிக்கப்பட்ட மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் விவசாய விளைச்சல்ககளே இவ்வாறு யாழ் நகருக்குக் கொண்டுவந்து விற்கப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது
குறிப்பாக வலிகாமம் வடக்கில் மக்களின் சொந்தப் பூர்வீக நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அந்தக் காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவ்வாறு அறுவடை செய்யப்படும் சோளங்களை இராணுவத்தினரே நேரடியாகத் தங்களது வாகனங்களில் யாழ்ப்பாண நகர்ப் பகுதிக்குக் கொண்டுவந்து விற்பனையில் ஈடுபட்டு வருவது அண்மைய நாள்களில் அவதானிக்க முடிகின்றது.
அதேநேரம் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி வலிகாமம் பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பல வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் இவர்கள், வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வசிப்பிடங்களிலும் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.
எனினும், மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு அரச தரப்போ அல்லது படைத் தரப்போ இதுவரை எந்தவிதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை.
மாறாக, மக்களின் சொந்த நிலங்களை அத்துமீறிப் பயன்படுத்தி, அங்கிருந்து கிடைக்கும் பொருளாதார வருமானங்களைத் தாங்களே ஈட்டி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் படையினர் வாகனங்களில் வந்து வீதிகளில் நேரடியாகச் சோள வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால், யாழ். நகரில் உள்ள உள்ளூர்ச் சிறு வியாபாரிகள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளதுடன் சந்தைப்போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது அன்றாடப் பிழைப்பை இழக்கும் அபாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பொறுப்புள்ள தரப்புகள் உடனடியாகத் தலையிட்டு, படையினரின் இத்தகைய முறையற்ற மற்றும் அடாவடித்தனமான வியாபார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் கையளிக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.




