மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21) காலமானார்.
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி 1965 செப்டம்பர்,16 இல் மட்டக்களப்பில் பிறந்து, ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தார். பின்னர் பகுதிநேர ஊடகவியலாளராக வீரகேசரி, தமிழ்நெட் ஆகியவற்றில் பணியாற்றினார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
2004 ஏப்ரல் 04, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலமாக விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களில் இவரும் ஒருவராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 44,457 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
அப்போது பல நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரமுடியாமல் இருந்த சமயம், 2006 யூலை மாதம் மட்டக்களப்பில் இவர் வசித்த பூம்புகார் வீடு மீது இனம் தெரியாத நபர்களால் ஆர்.பி.ஜி தாக்குதல் நடத்தப்பட்டது.
வடகிழக்கில் இருந்து தெரிவான 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.
அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் எனும் பெயரில் ஒரு நூலையும் 2008 காலப்பகுதியில் வெளியிட்டிருந்தார்.
அந்த காலப்பகுதியில் இருந்த அச்சுறுத்தல் காரணமாக 2008இல் இவர் குடும்பத்துடன் பிரித்தானியாவிற்கு புலம் பெயர்ந்தார்.
2010 மே மாதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தலிலும் லண்டனில் உறுப்பினர் தெரிவில் இவரும் போட்டியிட்டும் உறுப்பினராக தெரிவாகியும் இருந்து பின்னர் விலகியும் இருந்தார்.
பின்னர் 2020 காலப்பகுதியில் மீண்டும் ஆளும்தரப்பு ஆதரவுடன் இலங்கைக்கு வந்து விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த கருணாவால் உருவான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் சிலவருடங்கள் இணைந்து செயல்பட்டு அதிலும் இருந்து விலகியபின்னர், 2024 மே மாதம் ஐக்கிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி இணைப்பாளராக நியமனம் பெற்று 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல், 2024, நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தல் எல்லாவற்றிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்றிருந்தார்.
சுகவீனம் உற்ற நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சுமார் இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்ற நிலையில் இன்று பிற்பகல் 61வது வயதில் காலமானார்.




