நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கடல் அலையின் தாக்கம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக, அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடல் அரிப்பு தீவிரமடைந்துள்ளதால், கரைவலை மீனவர்கள் தங்களது வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் வலைகளை இழுப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாத காரணத்தால், அவர்கள் தற்போது வீதியோரப் பகுதிகளை பயன்படுத்தி வலை இழுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அண்மைக் காலமாக கடல் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கரைவலை மீனவர்கள் தங்களது தோணிகளை பயன்படுத்தி சுதந்திரமாக கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். அதேவேளை, மீன்பிடித்த பின்னர் வலைகளை மீண்டும் கரைக்கு இழுத்துவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் தொழிலும் நாளாந்த வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மீனவர்களின் இந்த அவசர நடவடிக்கைகள் காரணமாக, அப்பகுதி வீதியை பயன்படுத்தும் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, அன்றாடம் பயணிக்கும் வாகன ஓட்டிகள், மீன் குளிரூட்டும் லொறிகள், தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டோர், வீதியோரத்தில் இழுக்கப்படும் வலைகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலைமை, ஒருபுறம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மறுபுறம் பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளையும் பாதிக்கும் அளவுக்கு மோசமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கடல் அரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர தீர்வொன்றை அவசரமாக நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வரும் நிந்தவூர் கடற்கரைப் பகுதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.




