இலங்கை உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது மேலாளர் ரண்நாயக்க முதலியன்சேலாகே பிரசன்ன (Rannayaka Mudiyanselage Prassanna) என்பவர், பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுகளின்படி, நிறுவனத்திற்கான பைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை முறையான கொள்வனவு நடைமுறைகளை பின்பற்றாமல் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடான பரிவர்த்தனையால் அரசுக்கு சுமார் ரூ.1 கோடியே 43 இலட்சம் (ரூ.14.3 மில்லியன்) நிதி இழப்பு ஏற்பட்டதுடன், பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற சலுகை கிடைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.




