வாயை திறந்தாலே அவதூறுகளை அள்ளிவீசும் யாழ்ப்பாண ஊசி எம்.பி அர்ச்சுனாவுக்கு, யாழ் நீதவான் நீதிமன்றம் கிடுக்குப்பிடி பிடித்துள்ளது. யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.
தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தனக்கு பேச்சு சுதந்திரம் இருப்பதாக அர்ச்சுனா தெரிவித்த நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் அவருக்கும் சாதாரண பொதுமகனுக்கும் ஒருவிதமான சட்டமே பொருந்துமென்றும், யாருக்கும் எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை பரப்ப முடியாதென்றும் உத்தரவிட்டது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் வைத்தியர் கிருசாந்திக்கு எதிராக தனிப்பட்ட குரோதத்தின் அடிப்படையில் அவதூறுகளை பரப்பினார். அவர் ஊழல் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிராக வைத்தியர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில், அர்ச்சுனா இனிமேல் குறிப்பிட்ட வைத்தியருக்கு எதிராகவோ- வேறு யாருக்கும் எதிராகவோ ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பக்கூடாது என்றும், இதுவரை வைத்தியர் தொடர்பாக பரப்பிய அவதூறு வீடியோக்களை உடனடியாக தனது சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
இதேவேளை, அண்மைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஏனையவர்களை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி வந்த அர்ச்சுனா, இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு, நீதிமன்றம் செல்வதாக குறிப்பிட்டு எழுந்து சென்றார். வழக்கு தீர்ப்பின் பின் மீண்டும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வந்தவர், சுமார் 5 நிமிடங்களிற்குள் அங்கிருந்து மீண்டும் வெளியேறிச்சென்றது குறிப்பிடத்தக்கது.




